தமிழ்நாடு

சிவகங்கை, காங்கேயத்தில் மாட்டின ஆராய்ச்சி நிலையம்

webteam

சிவகங்கை மாவட்டத்தில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழர்களின் கலாசார பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் புலிக்குளம் மாட்டினத்தைப் பேணிக் காக்க 2 கோடி ரூபாயில் சிவகங்கை மாவட்டத்தில் மாட்டின ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் மாட்டினத்தைப் பாதுகாப்பதற்காக காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்றும் கால்நடைத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி அறிவித்துள்ளார். இதற்கு இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் மாட்டின ஆராய்ச்சிக்காக மொத்தம் நான்கரை கோடி ரூபாய் செலவில் ஆராய்ச்சி மையங்களை தமிழக கால்நடை ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின்கீழ் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.