தமிழ்நாடு

அண்ணன் மரணத்தால் நின்ற தங்கை திருமணம்..! சோகத்தில் கிராமம்..!

அண்ணன் மரணத்தால் நின்ற தங்கை திருமணம்..! சோகத்தில் கிராமம்..!

webteam

மண்ணச்சநல்லூரில் அண்ணனின் மரணத்தால் தங்கையின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு செல்லத்தாயி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் தனபால் (29) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் இரண்டு மூத்த சகோதரிகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கடைசி சகோதரிக்கும் முசிறி வட்டம் உடையான்பட்டியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் குமரனுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.  

இந்நிலையில் தனபால் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது வீட்டின் அருகேயுள்ள, தண்ணீர் இல்லாத கிணற்றில் கால் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அண்ணன் தனபாலின் மரணத்தால், தங்கை மீனாவுக்கு நேற்று நடைபெறயிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.