டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார் twitter page
தமிழ்நாடு

சித்தராமையா Vs D.K.சிவக்குமார்: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? மாறி மாறி ஒட்டப்படும் போஸ்டர்கள்!

PT WEB

கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், முந்தைய தேர்தலைவிட இம்முறை 55 தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 22 இடங்கள் கிடைத்துள்ளன.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி 66 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில்104 தொகுதிகளைக் கைப்பற்றிய அக்கட்சி இம்முறை 38 தொகுதிகளை இழந்துள்ளது. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முந்தைய தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற அந்தக் கட்சி, இம்முறை 18 தொகுதிளை இழந்துள்ளது. பிற கட்சிகள், சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சியமைக்கும் நிலையில் அங்கு அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமாரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும் சித்தராமையாவுக்கு வாழ்த்துக்கள் " என சித்தராமையாவின் வீட்டின் முன்பு அவரது அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில், மீண்டும் கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் சிதராமையாவுக்கு வாழ்த்துக்கள், என அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சித்தராமையா

அதேபோல D.K. சிவகுமாரின் இல்லத்திற்கு முன்பாகவும் அவரை மாநில முதல்வராக்க வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர். கர்நாடக மாநிலத்தின் முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் நாளை காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இருவருமே முதல்வராக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை இருவர்களிடமும் ஆலோசித்து முதல்வர் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.