ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் தற்போது குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் இன்றி இயற்கையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் ‘மீத்தேன்’ என்கிற திட்டம் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டமாக மறுவடிவமெடுத்து புதுக்கோட்டை, தஞ்சை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டுக்கும், வளர்ச்சிக்கும் உகந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலங்களை அழித்தும் அதற்கான பாதிப்பை உண்டாக்கியும் ஏற்படுத்தும் திட்டம் எதுவுமே ஏற்புடையதல்ல. அத்தோடு, இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அப்பகுதி மக்களிடையே விளக்கி ஒப்புதல் பெற்ற பிறகே செயல்படுத்தவேண்டும். களமிறங்கி போராடும் மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் தரும் வகையில், நாங்கள் அவர்களுக்கு என்றும் துணை நிற்போம். மக்களும், தமிழக அரசும் வைத்துள்ள இந்தக் கோரிக்கையை ஏற்று இத்திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.