தமிழ்நாடு

'நீங்க ஹெல்மேட் போடல; பைன் கட்டுங்க' - ஆட்டோ ஓட்டுநருக்கு வந்த அதிர்ச்சி அபராதம்!

கலிலுல்லா

ஹெல்மேட் போடவில்லை என்று கூறி கும்பகோணத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கு மதுரையிலிருந்து அபராதம் விதித்திருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் குருநாதன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டு வருகிறார். TN68 L1374 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவை முறையாக சாலை பர்மிட் எப்சி வாகன காப்பீடு ஆவணங்களை சரியாக பராமரித்து வருகிறார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவிற்கு, மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து இருப்பது ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படத்தில் வரும் கிணற்றை காணவில்லை காமெடியைப் போல கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு ஹெல்மெட் போடவில்லை என மதுரையில் அபராதம் காவல்துறை போட்டுள்ளது

இதுகுறித்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (சிஐடியு ) மாநில குழு உறுப்பினர் பார்த்தசாரதி பேசுகையில், ''அக்டோபர் 5ஆம் தேதி, இரவு சுமார் 7 மணிவாக்கில் வழக்கம்போல் சவாரி செய்வதற்காக கும்பகோணம் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது பெட்ரோல் நிரப்பும் பொழுது அவரது செல்லுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் சென்றதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும் ஹெல்மெட் போடவில்லை என்றும் ரூபாய் 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது முற்றிலும் பொய் வழக்காகும். இது காவல்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கேலிக்கூத்தாக இருக்கிறது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கு உத்தரவாலும், பெட்ரோல் டீசல் கடுமையான விலை உயர்வால் தொழில் செய்ய முடியாமல், ஆட்டோ தொழிலாளிகள் அன்றாட வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கின்ற இச்சூழ்நிலையில் இதுபோன்று பொய் வழக்குகள் போடுவது கண்டிக்கத்தக்கது.

இது சம்பந்தமாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இப்பொய்வழக்கு சம்பந்தமாக புகார் அளிக்க உள்ளோம். இதனை கையாண்ட மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்து சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு ஆவணமாக தரவேண்டும்'' என தெரிவித்தார்.