சென்னை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திடலாம் என சேகர் ரெட்டியின் ஜாமீன் நிபந்தனையை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
சேகர் ரெட்டி தனக்கு விதித்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னையில் கையெழுத்திட அனுமதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதி எஸ்.பாஸ்கரன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு உத்தரவு வரும் வரை சென்னையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில், சேகர் ரெட்டியை மத்திய அமலாக்கப்பிரிவினர் கைது செய்தனர். அவருக்கு கடந்த மே மாதம் 12ஆம் தேதி ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், டெல்லியிலுள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.