தமிழ்நாடு

சங்கரன் உடலுக்கு ! மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்ணீர் அஞ்சலி

webteam

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் உடலுக்கு திரளான மாணவர்கள் அண்ணாநகரில் அஞ்சலி செலுத்தினர்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டும் என்றால் டெல்லி செல்ல வேண்டும் என்ற நிலையை மாற்றி, வெளிமாநிலத்தவரையும் தரமான பயிற்சிக்காக தமிழகம் வரவைத்த சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் தற்கொலை செய்துக்கொண்டார். மனைவி மற்றும் 2 மகள்களுடன் சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த சங்கரன் குடும்பப் பிரச்னை காரணமாக நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் நல்லகவுண்டன்பாளையத்திற்கு உடல் எடுத்து செல்லப்படுவதற்கு முன் சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு ஐஏஎஸ் அகாடமியின் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் நக்கீரன் கோபால், நடிகர் சூரி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் உழியர்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர்.

2004 ஆம் ஆண்டு சென்னை அண்ணாநகரில் 34 மாணவர்களோடு தொடங்கப்பட்ட சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி. இதுவரை 900க்கும் அதிகமானோர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று அரசுப்பணியில் உள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுக்கு வழிக்காட்டியாக இருந்த சங்கரன் மரணத்தால் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். சாதிக்கத் துடித்த மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சங்கர், இந்திய குடிமைப்பணியில் வளமான ஒரு தலைமுறையை உருவாக்கியவர் என்ற பெயருக்கு சொந்தகாரர். தன் வாழ்க்கையை பாதியிலேயே முடித்துக் கொண்ட சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர் அவரது மாணவர்கள்.