pocso act
pocso act  PT WEB
தமிழ்நாடு

சென்னை: சாக்லேட் தருவதாகக் கூறி 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; 3 தனிப்படை அமைத்த போலீஸ்

webteam

சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வரும் 7வயது சிறுமியின் பெற்றோர் ஒருவர் நேற்று நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், "தனது 7வயது மகள் தினமும் வீட்டு வெளியே அவரது சக நண்பர்களுடன் விளையாடுவார். கடந்த 30-ம் தேதி விளையாடச் சென்றவர் அழுதுகொண்டே வீடு திரும்பினார். இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிலர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் சாக்லேட் தருவதாகக்கூறி அழைத்துச் சென்றதாகவும், அங்கு 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாக்லேட்களை கொடுத்து தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் சிறுமி அழுதுகொண்டே வந்து தன்னிடம் தகவல் தெரிவித்ததாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் பேரில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் பல மாதங்களாக சாக்லேட் தருவதாகக் கூறி 7வயது முதல் 10 வயது வரை உள்ள மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஒரு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியிடம் வெளியில் கூறினாளோ? அல்லது அடுத்த முறை வரவில்லை என்றாளோ? பெற்றோரைக் கொலை செய்துவிடுவதாக மர்ம நபர் மிரட்டி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

புகார் அளிக்கப்பட்ட சிறுமிக்குப் பொங்கல் பண்டிகைக்கு முன்பு, சாக்லேட் தருவதாகக் கூறி பாழடைந்த கட்டடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் அதே சிறுமியை மர்ம நபர், சிறுவன் உதவியோடு அழைத்துள்ளதும் தெரியவந்தது.

மேலும் சிறுவன் 'சாக்லேட் அங்கிள்' அழைப்பதாகக் கூறியபோது சிறுமி பயத்தில் கதறியுள்ளார். அப்போது அவரது தந்தை என்னாச்சு" எனக் கேட்டுள்ளார். அப்போதுதான் சிறுமிக்கு நடந்த கொடுமை அவரது தந்தைக்கு தெரியவந்ததுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து அந்த சிறுமி, தனக்கு நடந்துபோல, மேலும் இரண்டு சிறுமிகளுக்கும் நடந்துள்ளது எனத் தெரிவித்தபோதுதான் மற்ற சிறுமிகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 3 சிறுமிகள் மற்றும் சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மூன்று சிறுமிகளுக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த, மர்ம நபர் குறித்து "தனக்கு எதுவும் தெரியாது எனவும் இங்கு வரும் போதெல்லாம் தனக்கு நிறைய சாக்லேட் தருவார்" என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலமுறை நடந்தும், ஒரு சில நேரத்தில், இருசக்கர வாகனத்திலும் அந்த மர்ம நபர் வந்துள்ளார் என்றும் சிறுவன் தெரிவித்துள்ளான். பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகள் மற்றும் சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அனைத்தும் வாக்குமூலமாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மர்ம நபர் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியைப் பிடிப்பதற்காக 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், 3 சிறுமிகள் மட்டும்தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்களா? அல்லது அந்த மர்ம நபர் வேறு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை காவல்துறை செய்திக் குறிப்பு வாயிலாக விளக்கம் அளித்துள்ளது அதில், "மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த அடையாளம் தெரியாத நபரை பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேசியபோது, "கடந்த சில மாதங்களாக மூன்று சிறுமிகளுக்கும் மர்ம நபர் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை செய்துள்ளார். அந்த மர்ம நபர் குறித்த முழுமையான அடையாளங்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் சிறுவனுக்கும் தெரியவில்லை எனவும் இதனால் அந்த தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.