தமிழ்நாடு

பாலியல் சர்ச்சை: மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி தலைமறைவான இளைஞர் கைது

webteam

மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சின்னகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (34). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2 ஆம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த 36 வயதான மாற்றுதிறனாளி பெண்ணை வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் ஊர் முக்கியஸ்தர்களுக்கு தெரியவர, அனைத்து தரப்பினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணை ராஜ்மோகன்  திருமணம் செய்து கொள்வதாகவும், அதற்காக பெண்வீட்டார் சில நிலங்களை அவர் பெயரில் எழுதி வைப்பதாகவும் கூறி வரும் 7 ஆம் தேதி திருக்களம்பூர் கோயிலில் வைத்து திருமணம் முடித்து வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ராஜ்மோகன் திடீரென தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் தலைமறைவான ராஜ்மோகன் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாயமான ராஜ்மோகனை தேடி விசாரித்து வந்தனர். இந்தநிலையில் ராஜ்மோகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.