சத்தியமங்கலம் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்துவிட்டு தலைமறைவான வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியிலுள்ள சூசையபுரம் கிராமத்தை சேர்ந்த ஸ்தனிஸ் லாஸ். இவரது 17 வயது மகளும், அதே பகுதியில் வசிக்கும் லியோ பிரசாந்த் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16 ம் தேதி இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதன் பின் இருவரும் தங்களின் சொந்த ஊரான சூசையபுரம் வந்துள்ளனர்.
இந்தத் திருமணத்தை பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் லீயோ பிரசாத் வீட்டில் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த செப்டம்பர் 24ம் தேதி லியோ பிரசாந்த் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற அவர் திரும்பி வரவேயில்லை. பிரசாந்த்தின் பெற்றோர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 20ம் தேதியன்று மைனர் பெண் தனது காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி சூசையபுரம் பேருந்து நிறுத்தத்தில் தனது குடும்பத்தினருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே தகவலறிந்து வந்த தாளவாடி போலீசார் பெண் மைனர் என்பதால் இது குறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தை அணுகி புகார் அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மைனர் பெண், தனது குடும்பத்தினருடன் மகளிர் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து அனைத்து மகளிர் நிலையத்தில் வழக்குப் பதிந்து லியோ பிரசாந்தை தேடி வந்த நிலையில் அவர் சூசையபுரத்திலுள்ள தனது வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலில் பேரில் அங்கு சென்ற தாளவாடி போலீசார் லியோ பிரசாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிற்கு அவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.