தமிழ்நாடு

திருப்பதி கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணம் உயர்வு

ஜா. ஜாக்சன் சிங்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.

ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கு பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக் கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதன்படி, வஸ்த்ர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. கல்யாண உற்சவ சேவைக்கான கட்டணம் ரூ.1000-இல் இருந்து ரூ.2,500-ஆகவும், சுப்ரபாதம் தரிசன கட்டணம் ரூ.240-இல் இருந்து ரூ. 2ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது. தோமாலா சேவை மற்றும் அர்ச்சனைக் கட்டணத்தை ரூ.440 -இல் இருந்து ரூ. 5 ஆயிரமாக அதிகரிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் அடுத்த ஓரிரு நாள்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.