gold theft
gold theft pt
தமிழ்நாடு

“யார் எடுத்தாலும் கொடுத்திடுங்க” -உயிர் பயத்தில் வெளியேறிய குடும்பம்..வெள்ளத்தால் நேர்ந்த விபரீதம்

யுவபுருஷ்

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து ராஜீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மக்களை மீட்புக் குழுவினர், படகு மூலம் மீட்டு சென்று முகாம்களில் தங்க வைத்தனர். மழைநீர் வடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அடுத்தடுத்து ஐந்து வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சோமங்கலம் போலீசருக்கு அளித்த தகவலின் பேரில் கைரேகைகளை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். வெள்ள பாதிப்பால் வீட்டை விட்டு வெளியேறியபோது அரங்கேறிய கொள்ளை சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகையை பறிகொடுத்த ஜெயஸ்ரீ என்பவர் நம்முடன் பேசியபோது, இருபது சவரன் நகைகளையும், ஒன்றரை லட்சம் பணத்தையும் திருடியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்ளத்தான் வெளியே சென்றோம். நாங்களே மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறோம். யார் எடுத்திருந்தாலும் தயவு செய்து எங்களது நகைகளையும், பணத்தையும் கொடுத்துவிடுங்கள் என்று நாதழுதழுக்க பேசியுள்ளார்.