சின்னத்திரை நடிகை தீபா
சின்னத்திரை நடிகை தீபா  PT WEB
தமிழ்நாடு

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி வழக்கு தொடர்ந்த சின்னத்திரை நடிகை - என்ன நடந்தது?

விமல் ராஜ்

நாம் இருவர் நமக்கு இருவர், அன்பே சிவம் உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்த நடிகை தீபா ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், தன்னுடைய மகனுடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும், கணேஷ் பாபு என்பவருடன் தீபாவுக்கு காதல் ஏற்பட்டு, இருவரும் கடந்த ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டு தீபாவின் வீட்டில் வசித்து வந்தனர். சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தீபாவை பிரிந்து கணேஷ் பாபு தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

இதையடுத்து, பிரிந்து வாழும் தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தீபா மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " தனக்கும் கணேஷ் பாவுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெரியார் திடலில் சுயமரியாதை திருமணம் நடைபெற்று. அந்த திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான தொடக்கத்தில் கணேஷ் பாபு அன்பாக இருந்து வந்தார். பின்னர் அடிக்கடி தன்னுடன் காரணமின்றி சண்டையிட்டு, கணேசின் குடும்பத்தினர் தன்னை மனிதத்தன்மையுடன் நடத்தவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும், " திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்தபோது சத்து மாத்திரை எனக்கூறி கணேஷ்பாபுவிற்கு தெரியாமல் அவரது குடும்பத்தினர் ஒரு மாத்திரை கொடுத்தனர். அந்த மாத்திரை சாப்பிட்ட பின்னர் எனக்குக் கருக்கலைப்பு ஏற்பட்டது. கணேஷ் பாபு என்னைத் தாக்கியதால் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. என்னுடைய கணவர் கணேஷ் பாபுவின் சகோதரர் ரமணகிரிவாசன் என்பவர் எனக்குத் தொடர்ந்து மன ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்தார். கணவருடன் சேர்ந்து வாழ்வதையே நான் விரும்புகிறேன். என்னைக் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.