செந்தில்பாலாஜி, ஹெச் ராஜா
செந்தில்பாலாஜி, ஹெச் ராஜா pt web
தமிழ்நாடு

“நீதிமன்றமே செந்தில் பாலாஜியை நீக்கி இருக்க வேண்டும்” - ஹெச்.ராஜா கருத்து

Angeshwar G

செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியானது அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சரவையில் செந்தில்பாலாஜியை வைத்திருப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த அமைச்சரவைகளை வேறு இரு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளித்த தமிழ்நாடு அரசு, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அறிவித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு தரப்பில், செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எவ்வித தடையும் இல்லை என்றும் எம்.எல்.ஏ.விற்கு வழங்கப்படும் ஊதியம் தான் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கை தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர் அமைச்சராக தொடர்வது தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர் அமைச்சராக தொடரமுடியுமா என்பது குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுதாரர் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, “செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வதால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பலனும் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் நேரடியாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி விடுங்கள் என சொல்லும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கோ சட்டத்திற்கோ இல்லை என்றாலும், முதலமைச்சர் என்பவர் நல்ல ஆட்சியை தர வேண்டும் என்றால் இதை அறிவுரையாக ஏற்றுக்கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றார்.

புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “தார்மீக ரீதியில் மட்டுமல்ல சட்டரீதியிலும் அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல. நீதிமன்றம் தார்மீக ரீதியாக தவறு என சொல்கிறது. ஆனால் அவர்களே இதை தீர்ப்பாக கூறியிருக்க முடியும். இது குறித்து ஏற்கனவே பலமுறை சொல்லியுள்ளேன். ஆகவே நீதிமன்றம் அவரை நீக்கி இருக்க வேண்டும் என்பது என் கருத்து” என்றார்.