செந்தில் பாலாஜி Pt web
தமிழ்நாடு

குதிரை பேர வழக்கு | செந்தில் பாலாஜிக்கு கிடைத்தது முன்ஜாமீன்.. பரபரப்பான வாதத்திற்கு பிறகு தீர்ப்பு!

திமுகவில் 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கொடுக்க யாராவது முன்வருவார்களா? என செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதம்.

Premkumar S

தவெகவின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா, சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவிருப்பதாக கூறி சிலர் தன்னிடம் 35 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக சென்னை மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னையை சேர்ந்த தியாகராஜன் உட்பட 9 பேரை கைது செய்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது. தொடர்ந்து இந்த விசாரனையில், இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பட்டது. எனினும், அவர் ஆஜராகவில்லை.

செந்தில் பாலாஜி

இந்த சூழலில் தான், இதுதொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்தவழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து, குதிரை பேரத்துக்கு ஆதாரம் உள்ளதா?; குதிரை பேரம் என கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதா?; ரூ.35 கோடி பேரம் என்பது யூகம்தான். 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே திமுகவில் இருக்கின்றனர். அப்படி இருக்கு போது, ஒருவருக்கு 35 கோடி கொடுக்க யார் முன்வருவார்கள்? எப்படி ஆட்சியைக் கவிழ்க்க முடியும். போலீசார் தான் இதை பெரிதாக்கி வருகின்றனர் என வாதிடப்பட்டது.

அதேசமயம், அரசு தரப்பில் இருந்து, ”எம்.எல்.ஏ.வுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதற்காக சதித் திட்டம் சென்னையின் முக்கிய இடங்களில் தீட்டப்பட்டன; கிண்டி நட்சத்திர ஹோட்டல், ஈசிஆரில் உள்ள ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ளன; சதியை நிரூபிக்க சிசிடிவி ஆதாரங்கள் ஹோட்டல்களில் இருந்தன. அவற்றில் சில காட்சிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன” என வாதடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அவரது சகோதரர் அசோக்குமாருக்கும் முன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள், காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்திருக்கிறது.