உயர்நீதிமன்றம், செந்தில்பாலாஜி
உயர்நீதிமன்றம், செந்தில்பாலாஜி file image
தமிழ்நாடு

செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: இரண்டு நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு!

PT WEB

செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம் மற்றும் அவரது சட்டமன்ற அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு 3 மணியளவில் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், அவருக்கு நேற்று நள்ளிரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில்பாலாஜியை, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.

இந்தச் சூழலில், செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல், அந்த வழக்கிலிருந்து விலகினார். இதையடுத்து, ‘புதிய அமர்வில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க பட்டியலிடப்படும். உரிய நடைமுறையைப் பின்பற்றி வேறு அமர்வில் வழக்கு விரைவாகப் பட்டியலிடப்படும்’ என தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.

இதனிடையே, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.