தமிழ்நாடு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம்

JustinDurai

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென கனமழை கொட்டியது. இதனால், மக்கள், வாகன ஓட்டிகள் அதிகளவு சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த திடீர் மழையை சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமித் ஷாவிற்கு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உரிய நடவடிக்கை கோரி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இயக்குனராக இருந்த புவியரசன், செந்தாமரை கண்ணன் வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.