ஆயுள் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமிதுரை, முத்துராஜ், செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரம் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில், அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ சார்பில் முறையாக அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால் வழக்கு ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி வழக்கு ஏப்ரல் 2 அன்று வந்தபோது சிபிஐ சார்பிலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் சார்பிலும் குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. குற்றவாளிகள் சார்பில், ஏற்கெனவே 5 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இரண்டு தரப்பு வாதத்தையும் தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி இன்று தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி முத்துக்குமரன், 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த உதவி ஆய்வாளர் பால்ராஜ், கொரோனா காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.