என் சங்கரய்யா
என் சங்கரய்யா  file image
தமிழ்நாடு

சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்

ஜெனிட்டா ரோஸ்லின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர் தி.நகர் கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது.

சுதந்திர போராட்ட வீரரான என் சங்கரய்யாவுக்கு, வயது 102. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சளி மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

என் சங்கரய்யா

2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (15.11.2023) காலை 9.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரகவும் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றியவர்.

மேலும் விவசாயிகள், தொழிலாளிகள் என்று அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராட்டங்கள் பலவற்றை நடத்தியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழக அரசின் சார்பாக தகைசால் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மதியம் 2 மணி வரை முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும், பின்னர் இதனை தொடர்ந்து தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாற்றங்கள் பல செய்து போராட்டங்கள் பல முன்னெடுத்து அரும்பணியாற்றிய தலைவர் என்ற வகையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் நேரில் சென்று அவர் உடலுக்கு மரியாதை செய்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.