தமிழ்நாடு

பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய ஆசிரியர் போக்சோவில் கைது

rajakannan

திருவண்ணாமலையில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 

செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அவரது கணித ஆசிரியர் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதனைகேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

மாணவியின், பெற்றோரும், கிராம மக்களும் பள்ளியை தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆசிரியர் கண்ணன் இருந்த வகுப்பறைக்கு சென்ற அவர்கள், அவரை சரமாரியாக தாக்கினர். வகுப்பறையில் இருந்த நாற்காலியை கொண்டு அடித்தனர். சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து அடித்ததில் ஆசிரியரின் தலையில் ரத்தம் வழிந்தது. வகுப்பறையில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னிலையில் அவர் தாக்கப்பட்டர். தனது ஆசிரியர் தாக்கப்படுவதை கண்டு வகுப்பறையில் இருந்த மாணவி அலறியடித்து கத்தினர். 

இந்நிலையில், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் புகாரில் சிக்கிய கணித ஆசிரியர் கண்ணன் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்குப் பதிந்து ஆசிரியர் கண்ணனை செங்கம் மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.