தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி: உபரிநீர் திறப்பை அதிகரிக்க கோரிக்கை

kaleelrahman

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் அருகே உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நிலையில் பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 90 சதவீதம் நிறைந்திருந்தது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி கிடுகிடுவென உயர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியில் இருந்து உபரிநீர் வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சியின் சேன்ட்ரோ சிட்டி மற்றும் காட்ராம்பாக்கம் பகுதி குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் அளவை கூடுதலாக திறந்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.