தமிழ்நாடு

திறந்துவிடப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி: விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறப்பு

நிவேதா ஜெகராஜா

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முதல் கட்டமாக விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.45 அடியாக உள்ள நிலையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏரி திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்படும் என இன்று காலை அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள நத்தம், குன்றத்தூர், நந்தம்பாக்கம், பூந்தமண்டலம், வழுதம்பேடு, பழந்தமண்டலம், எருமையூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.