திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் மறைந்ததையடுத்து, அடுத்தமாதம் இடைத்தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அதிகாரப்பூர்வமாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்ற அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
அவருடைய அந்த பதிவில், ”ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை நம்மோடு பேசியவற்றை, இங்கே காணலாம்...