தமிழ்நாடு

“தனி இடம் வேண்டாம்”- மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட சீமான்..!

Rasus

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரையில் அமர்ந்து உணவு உண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி ஊக்கமளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மில் களம் ஒன்றில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வில் சுமார் 3270 பேர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களுடன் தரையில் அமர்ந்து சீமானும் சாப்பிட்ட காட்சி பார்ப்போரை வியக்க வைத்தது.

சீமானுக்கு தனியாக சாப்பிட இடம் ஒதுக்கியும் அவர் மக்களோடு தான் தரையில் அமர்ந்து சாப்பிடுவேன் என்று கூறி சாப்பிட்டார். நிகழ்ச்சி நடந்த மண்டபத்தில் புயல் அடித்த மறுதினம் முதல் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் வழங்கிய உணவு பொருட்களை கொண்டு 22 நாட்கள் உணவு தயாரிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு எம்.பி கனிமொழி 6 ஆயிரம் கிலோ அரிசி, 5 ஆயிரம் கிலோ பருப்பு, 5 ஆயிரம் கிலோ எண்னெய் அனுப்பியதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். சீமான் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.