தமிழ்நாடு

“எடப்பாடி பழனிசாமிக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை” - சீமான் பேச்சு

webteam

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்று என்னிடம் கூறியுள்ளார் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. 21வது நாளான இன்று போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து பேசினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “என்.பி.ஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது. சிஏஏ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கு எதிரானது. இந்தச் சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களே முகாமுக்கு செல்ல வேண்டிய நிலைதான் வரும்.

 இந்தியாவிற்குள் இனிமேல் அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் எனக் கூறலாமே தவிர, ஏற்கனவே வந்தவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் என்பது, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவது பாசிசம்.

ட்ரம்ப் மற்றும் மோடி ஆகியோர் ஒரே சிந்தனை கொண்டவர்கள். ஆகவேதான் அவர் இந்தியாவிற்கு வந்தபோது சி.ஏ.ஏ சட்டம் குறித்து எதுவும் பேசாமல் சென்றுள்ளார். நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருந்து கொண்டு உள்ளது.

ஆனால் அவற்றை பேசவிடாமல் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றி அதை மட்டுமே நம்மை பேச வைத்துக் கொண்டுள்ளார்கள். இனிமேல் ஆயுதங்களை ஏந்தி போரிடுவதற்குப் பதிலாக உயிரியல் போர்கள் (Bio-War)தான் நடக்கும்” என்றார்.