தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி வைகோ மனுதாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாகக் கூறி வைகோ மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்ட்டது
இந்த வழக்கில் 8 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் தானே சரணடைவதாகக் கூறி, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார் வைகோ. பின்னர் புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் 52 நாட்கள் கழித்து ஜாமினில் வெளியில் வந்தார்.
பின்னர் இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு 2018 ஆகஸ்ட் 2 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக ஜூன் 19ஆம் தேதி நீதிபதி ஜெ.சாந்தி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்த, நீதி மன்றம், அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. உடனடியாக அபராதத்தைக் கட்டிய வைகோவின் வழக்கறிஞர்கள், தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரி உடனடியாக மனு தாக்கல் செய்தனர்.