தமிழ்நாடு

மருத்துவமனையில் ரகசிய கேமரா.. பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்தவர் கைது..!

Rasus

மருத்துவமனையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து படம்பிடித்ததாக, சென்னையில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருபவர் எர்ணாவூரை சேர்ந்த சிவபிரகாஷ். இவர் நேற்று முன்தினம் தனது செல்போனில் பெண் ஒருவர் உடை மாற்றும் வீடியோவை தனது நண்பரான அமல்ராஜ் என்பவரிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த மருத்துவமனையின் மேலாளர், சிவப்பிரகாஷிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த செல்போனை கேட்டபோது தர மறுத்துள்ளார். மேலும் செல்போனில் இருந்த வீடியோக்களை அழிக்கவும் முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனை மேலாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிவபிரகாஷ் மற்றும் அமல்ராஜ் ஆகிய இருவரை போலீசார் நேற்று இரவு பிடித்து விசாரணை செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார், செல்போனில் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்கள் ஒரு சிலரின் உடைமாற்றும் காட்சிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், சிவபிரகாஷ் பணிக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது என்பது தெரியவந்துள்ளது.

ஹவுஸ் கீப்பிங் வேலை என்பதால் அனைத்து அறைகளுக்குள்ளும் செல்ல முடியும் என்பதால் அறையை சுத்தம் செய்வது போல் சென்று தனது செல்போனை மறைத்து வைத்து வீடியோ படங்கள் எடுத்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வீடியோ எடுத்த சிவபிரகாஷை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.