தமிழ்நாடு

துளையிடும் பணியை தொடங்கியது இரண்டாவது ரிக் இயந்திரம் ! 

webteam

குழந்தை சுர்ஜித்தை மீட்புப் பணிக்கு வந்த அதிநவீன இரண்டாவது ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டு துளையிட ஆரம்பித்துள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 52 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் இராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் இரண்டாவது இயந்திரத்தின் உபகரணங்களை பொருத்தும் பணி தற்போது நிறைவடைந்து ,அந்த இயந்திரம் துளையிடும் பணியை தொடங்கியுள்ளது. ஏற்கெனவே துளையிட்டு வந்த முதல் ரிக் இயந்திரம் அப்புற படுத்தப்பட்டு இந்த அதிநவீன இயந்திரம் துளையிட ஆரம்பித்துள்ளது. இந்த இயந்திரம் முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது ஆகும். இன்னும் நான்கு மணி நேரத்திற்குள் துளையிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.