ஊரக உள்ளாட்சித் தேர்தலின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரை ஓய்ந்ததையடுத்து நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டிலுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நாளை இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. 27 மாவட்டங்களிலுள்ள 46ஆயிரத்து 639 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2 ஆயிரத்து 544 ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 ஆயிரத்து 924 ஊராட்சி தலைவர், 38 ஆயிரத்து 916 வார்டு உறுப்பினர் பதவிகள் இதில் அடங்கும்.
இரண்டாம் கட்டத் தேர்தலில் 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு மொத்தம் ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். முன்னதாக 27-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இரு தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ஆம் தேதி எண்ணப்படுகிறது.