student protest
student protest PT
தமிழ்நாடு

சத்துணவு தரமாக இல்லை என போராட்டத்தில் குதித்த மாணவர்கள்... அதிகாரிகளின் வார்த்தையால் கண்ணீர்!

யுவபுருஷ்

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே கீழமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 61 பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையே, பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்நிலையில் “தரமற்ற சத்துணவு வழங்கப்படுவதால், அதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து கேட்டால், சமையல் உதவியாளர் ராணி என்பவர் அவதூறாக பேசி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமற்ற முறையில் உணவு வழங்கியவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளியில் பயிலக்கூடிய மாணவ மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து கண்ணீருடன் பள்ளி வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் வட்டார கல்வி அலுவலர் பவனிந்திஸ்வரன், பசுந்தனை போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின்போது, மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை என்றால் ஆசிரியர்களை மாற்றி விடுவோம் என்று கல்வித்துறை அதிகாரகள் கூறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழத்தொடங்கினர்.

தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் “இனிமேல் சத்துணவில் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், அவதூறாக பேசிய ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். பேச்சுவார்த்தை நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, தர்ணா போராட்டத்தை கைவிட்ட மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குச் சென்றனர்.