கும்பகோணத்தில் பள்ளி மாணவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கபிலன். 15 வயதான இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் பள்ளிக்கு செல்வதற்காக சோழபுரம் அருகே அந்தப் பேருந்தில் ஏறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கும்பகோணம் அருகே நத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தப்போது எதிரே வந்த வாகனத்தை பார்த்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியபோது படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர் கபிலன், எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக பயணிகள், உடனே மாணவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு, மாணவர் கபிலன் அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.