திருச்சியில் பள்ளி மாணவர் ஒருவர் நடுரோட்டில் அரிவாளால் மற்றொரு மாணவரை வெட்ட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் நடந்த இந்த சம்பவம் வீடியோவாக வெளியானது. போலீசார் விசாரணை நடத்தி, பெற்றோருக்கு அறிவுரை வழங்கி மாணவரை ஜாமினில் விடுவித்தனர்.
திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் தனியார் பள்ளியில் பயின்றுவரும் மாணவனை, மற்றொரு மாணவர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள சாலையில் இரண்டு நாட்கள் முன்பு இச்சம்பவம் நடந்தது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே பள்ளியில் பயின்ற மாணவர் இரண்டு மாதத்திற்கு முன்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்தசூழலில் உடன் படிக்கும் சக மாணவர் சைக்கிளில் வந்தநிலையில், படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர் கையில் அரிவாளிலுடன் நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்ட முயன்றார்.
நடுசாலையில் இந்த சம்பவம் நடந்த நிலையில், உயிரை காப்பாற்றிக்கொள்ள சாலையில் நின்ற ஆட்டோவிற்கு சுற்றி சுற்றி வர, கையில் அரிவாளை வைத்திருந்த மாணவரும் அவரை வெட்டுவதற்கு சுற்றிசுற்றிவந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட போது மக்கள் கூச்சலிடவே அரிவாளுடன் வந்த மாணவர் சைக்கிளில் வந்த மாணவர் சைக்கிள் டயரை வெட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து இளஞ்சிறார் நீதி குழு தலைவர் முன்பு ஆஜர்படுத்தினர். பெற்றோர்களை அழைத்து நீதிபதி அறிவுரை கொடுத்து சிறாரை ஜாமீனில் விடுவித்தார்.