தமிழ்நாடு

கோவை மாணவி தற்கொலை: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

கலிலுல்லா

கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யயப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர் மிதுன் என்ற ஆசிரியர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இக்கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர் மிதுன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனையும் கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்க உறவினர்களும், போராட்டக்குழுக்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். அவர் இன்று மாலை கோவை அழைத்து வரப்படுகிறார். பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்த நிலையில் ஏற்கெனவே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.