தமிழ்நாடு

கூட்ட நெரிசல்: பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

அருப்புக்கோட்டை அருகே பேருந்தின் படியில் இருந்து கீழே விழுந்து படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி அடுத்து ரெங்கையன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவருடைய மகள் சக்திமாரி (16) பனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், சக்திமாரி தினமும் தனது ஊரிலிருந்து அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மாலை சத்திமாரி வழக்கம்போல் பள்ளி முடிந்து பனையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் ஏராளமானோர் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

அப்போது பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பேருந்தின் முன்பகுதி படியில் நின்று கொண்டிருந்த மாணவி சக்திமாரி திடீரென பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மாணவி சக்திமாரியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி சக்திமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் இருந்து பள்ளி மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது