தமிழ்நாடு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி

webteam

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காய்ச்சல் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்து வந்தது. இதனால் மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்குமாறு சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்தப் பிறகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகட்டிவ் என வந்துள்ளது.

இதையடுத்து, சில நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 267 பேருக்கு நாளை பணி நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.