தமிழ்நாடு

`யாரோ தவறவிட்டிருக்காங்க சார்.. அவங்ககிட்ட ஒப்படைச்சிடறீங்களா?’- நெகிழ வைத்த பள்ளி சிறார்!

webteam

குளச்சல் அருகே சாலையில் கிடந்த விலையுயர்ந்த செல்போனை மீட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் பொறுப்பாக ஒப்படைத்துள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர். இதற்காக ஆய்வாளரை பாராட்டியுள்ளார் ஆய்வாளர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் இலுப்பவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது பயஸ், ராபில், ஷாகித். 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களாகிய இவர்கள் பள்ளி முடிந்து நேற்று மாலை குளச்சல் அடுத்த உடையார்விளை பகுதில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளனர்.

அப்போது பொருட்களை வாங்கி விட்டு இரவு வீடு திரும்பும் போது சாலையில் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகே சென்று பார்த்த போது விலையுயர்ந்த செல்போன் திரை உடைந்த நிலையில் ஒலித்து கொண்டிருப்பதைக் கண்டு அதை எடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்த செல்போனை நேரடியாக குளச்சல் காவல் நிலையதிற்கு கொண்டு வந்து காவல் ஆய்வாளர் கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். `யாரோ தவறவிட்டிருக்கிறார்கள். ஒப்படைத்துவிடுங்க’ என காவல்துறையினரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர் சிறுவர்கள். அவர்களின் நேர்மையுயும் பொறுப்புணர்வையும் அறிந்து, அப்பகுதி மக்களும் காவல் நிலைய அதிகாரிகளும் அவர்களை பாராட்டி வருகின்றனர்.