ஆசியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்குவார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி பள்ளிக் கல்வித்துறை சார்பில் 377 ஆசிரியர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஆசியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்குவார். 90 ஆயிரம் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான். தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது” என்று கூறினார்.