தமிழ்நாடு

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரில் மோசடி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!

webteam

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில் "தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகின்றன.

இந்தப் பணிகளுக்கு கண்காணிப்பாளராக சுப்புலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தாருகாபுரம் பஞ்சாயத்து உறுப்பினராக முருகலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். 100 நாள் வேலை வாய்ப்பு கண்காணிப்பாளர்கள் 3 மாதம் (90 நாட்கள்) மட்டுமே பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால் சுப்புலட்சுமி கடந்த 7 மாத காலமாக கண்காணிப்பாளராக தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.

பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர் முருகலட்சுமியின் தந்தை ராமச்சந்திரன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். சுப்புலட்சுமி மற்றும் முருகலட்சுமி ஆகியோர் இணைந்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டு ராமச்சந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்கள் பராமரிப்பது, போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படம், நேரம், இடம் ஆகியவை GPS ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்ததை மனுதாரர் ஆதாரத்துடன் சமர்ப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. இந்த வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலரை சேர்க்க வேண்டும்” என உத்தரவிட்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் நடைமுறைகள் தொடர்பாகவும், வழக்கு தொடர்பாகவும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை செயலர் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்