காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
காவிரி நீர் பங்கீடு வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கால அவகாசம் முடியும் நாளில், ‘ஸ்கீம்’ என்று குறிப்பிட்டிருப்பது பற்றி மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. தீர்ப்பை அமல்படுத்தத் தவறிய மத்திய அரசு மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை மே 3-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. 3-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மத்திய அரசு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து காவிரி வரைவு அறிக்கை எந்த அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவிரி தொடர்பான வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளதால் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். வரைவுத் திட்டம் தாமதமாவதற்கு அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வரைவுத் திட்டத்தை உருவாக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மே 8-ஆம் தேதி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், ஏப்ரல், மே மாதத்திற்கான 4 டிஎம்சி தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர். ஆனால், அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், குடிநீர் தேவைக்கே பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 4 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே நேற்றே மத்திய அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.