ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
அந்த உத்தரவை எதிர்த்து டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் விசாரணையை ஒத்திவைக்கும்படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது. பட்டியலிட்டபடி நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.