தமிழ்நாடு

சத்தியமங்கலம்: ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் நிவாரண நிதி வழங்கிய கிராம நிர்வாக அலுவலர்

kaleelrahman

ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக ஒருமாத ஊதியத்தை மலைகிராமத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி தாலுகா இக்களூர் மலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சக்திவேல். இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உடன் இருந்து பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் கொரோனா நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். அதன்படி தனது ஒருமாத ஊதிய தொகை 29 ஆயிரத்து 221 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். ஒரு மாத ஊதியத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் சக்திவேலை மலைகிராம மக்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாராட்டினர்.