தமிழ்நாடு

“வேலூர் தேர்தல் குறித்து எந்தத் தகவலும் இல்லை”- சத்ய பிரதா சாஹூ

webteam

வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் தொகுதியில் பணம் பறிமுதல் நடவடிக்கைக்கு பிறகு அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது. 

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து எந்தத் தகவலும் தலைமைத் தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. 

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்காக கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை கோரியுள்ளோம். மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.