தமிழ்நாடு

குழந்தைபோல் அடம்பிடித்து கரும்புகளை ருசித்த காட்டு யானை

webteam

தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை நகராமல் காலால் தடுத்து நிறுத்திய காட்டுயானை, குழந்தை போல் அடம் பிடித்து கரும்புகளை எடுத்து சுவைத்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில், தற்போது தாளவாடி மலைப் பகுதியில் கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கரும்புகள் லாரி மூலம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்ததால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து காட்டு யானை லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் எடுத்து தின்றது. இதனால் மற்ற வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரம் லாரியை வழிமறித்த காட்டு யானை, கரும்புகளை ருசித்த பின் வனப்பகுதிக்குள் சென்றது.

இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.