தமிழ்நாடு

சத்தியமங்கலம்: வனத்துறை வைத்த கூண்டில் wanted ஆக வந்து சிக்கிய ஆண் சிறுத்தை

webteam

சத்தியமங்கலம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை சிக்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஆடு, மாடு, நாய், உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள குப்புசாமி என்பவரது தோட்டத்தில் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. கூண்டில் சிறுத்தை சிக்கிய தகவல் அறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிக்கியது ஆண் சிறுத்தை என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து சிறுத்தையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.