தமிழ்நாடு

சத்தியமங்கலம்: பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு.!

சத்தியமங்கலம்: பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு.!

webteam

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி எஸ் ஆர் டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசேகர். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நகர பொருளாளர். இவர் புஞ்சைபுளியம்பட்டியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு சொந்தமான மூன்று கார்களை தனது வீட்டில் முன்புறம் நிறுத்துவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிவதைக் கண்டு சிவசேகர் அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரிந்த காரை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் புஞ்சை புளியம்பட்டியில் பாஜக பிரமுகரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.