தமிழ்நாடு

சதுரகிரிமலைப் பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை!

webteam

கனமழை எச்சரிக்கை காரணமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது தரைமட்டத்திலிருந்து சுமார் 35௦௦அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தகோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். வனத்துறை சார்பில் இந்த கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய  நாட்களில் பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றனர். 

இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் வானிலை ஆய்வு மையம் விடுத்த 'ரெட் அலெர்ட்' காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை நேற்று அனுமதி மறுத்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அடிவாரப்பகுதியில் ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரி கோயிலில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கில் 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.