ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள கும்டாபுரம் பீரேஸ்வரர் ஆலயத்தில் பாரம்பரிய சாணியடி திருவிழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோவிலில் தீபாவளி பண்டிகையை அடுத்துவரும் மூன்றாவது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான விழா சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. முன்னதாக பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஊர்குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமிவை வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர். ஊர்தெய்வமான பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்கள் வெற்றுடம்புடன் கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். அங்கு கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக வடிவமைத்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள், ஒருவருக்கொருவர் மீது சாணத்தை வீசி மகிழ்ந்தனர். இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை பெண்கள்,ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.நிகழ்ச்சிக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர்.n தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விநோத திருவிழாவில் கலந்துகொண்டனர்.