செய்தியாளர்: C.விஜயகுமார்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, திருராமேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது சகோதரர் திவாகர் ஆகியோர் நேற்று மாலை சாமி தரிசனம் செய்தனர். மாசி மாதம் மூன்று தினங்கள் மட்டும் மாலையில் மறைகின்ற சூரிய கதிர்கள் நாகநாத சுவாமி லிங்கத்தில் பட்டு மறையும். அப்போது நாகநாத சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்படும்.
இந்த நேரத்தில் நாகநாத சுவாமியை வணங்கினால், இழந்த சக்தியை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் சசிகலா. இவரது கண்ணசைவுக்காகவே சசிகலாவின் உறவினர்களும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் காத்திருந்தனர்.
காலப்போக்கில் ஜெயலலிதாவின் மரணம், அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெற்ற சிறை தண்டனை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியது, தனது சகோதரி மகன் தினகரனை முன்னிறுத்தி அரசியல் பணி செய்தபோதும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளி என பல்வேறு முரண்பாடுகளில் சசிகலா இருந்து வருகிறார்.
இந்த சூழலில்தான் இழந்த சக்தியை (சூரியன்) மீண்டும் பெறுவதற்கு நாகநாத சுவாமியை வணங்கி மீண்டும் வலுப்பெற்றதாக ஐதீகம் கொண்ட இந்த கோயிலில் சசிகலா தான் இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்காக நேற்று வழிபாடு செய்தார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.