சென்னை மாநகர போலீஸ் எல்லையான பழஞ்சூர் பகுதியில் அமமுகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் முடிந்து விடுதலையான சசிகலா பெங்களூருவில் இருந்து கார் மூலமாக சென்னை சென்றார். வரும் வழி முழுவதும் கட்சியினர் வழங்கும் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வந்த அவர், நேற்று காலை பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னை மாநகர போலீசின் தொடக்க எல்லையான பழஞ்சூர் பகுதியில் சசிகலாவின் வாகனம் நுழைந்தது. அப்போது அவரது வாகனம் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்த 10 வாகனங்கள் மட்டும் சென்னைக்குள் வர அனுமதி அளித்தனர். பின்னர் நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்களின் மேல் இருந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் பூக்கள் தூவியும் மேளங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து சசிகலாவின் வாகனத்தை தொடர்ந்து முன்னும் பின்னும் வந்த கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் சாலையின் நடுவே இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசாரால் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் போலீசாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு வாகனங்களை வேகமாக அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சாலையில் மூன்று கட்டமாக தடுப்புகளை அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், சசிகலா ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் நிர்வாகிகள் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின் சிறிது, சிறிதாக வாகனங்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது 150-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்தனர்.