தமிழ்நாடு

எம்.எல்.ஏக்களுடன் தங்கினார் சசிகலா

எம்.எல்.ஏக்களுடன் தங்கினார் சசிகலா

webteam

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூவத்தூர் விடுதியில் உள்ள ஆதரவு எம்எல்ஏக்களுடன் தங்கினார்.

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கும் இடையே உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. சசிகலா தரப்பு அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து 3ஆவது நாளாக கூவத்தூர் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விடுதியில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது வெற்றியை தேடித்தந்தவர் ஜெயலலிதா என்றும் சோதனைக் காலத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரானார் என்றும் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை ஒருங்கிணைத்தவர் ஜெயலலிதா என கூறிய அவர், மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

கூவத்தூரில் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாகவும் அவர்களுடன் தங்க முடிவெடுத்து கூவத்தூருக்கு வந்துள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார். எம்எல்ஏக்களின் குடும்பத்தினர் மிரட்டப்பட்டுள்ளாதவும் முதலமைச்சராக இருந்து கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மக்களின் பசியை தீர்த்த தலைவர்களின் வழியில் தான் வந்துள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார். மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே சென்று தீர்த்து வைக்க வேண்டும் என சசிகலா கட்சியினரை கேட்டுக்கொண்டார். மீதமுள்ள நான்கரை ஆண்டு கால ஆட்சியை அதிமுக சிறப்பாக நடத்தும் என்றும் அவர் கூறினார்.